வேலூர் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்

7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக 5 பேர் கும்பலில் ஒருவரை மாணவியின் தந்தை கத்தியால் குத்தினார்.
வேலூர் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்
Published on

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com