பாவ மன்னிப்பு கேட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு - 2 பாதிரியார்கள் சரண்

கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கேட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 பாதிரியார்கள் இன்று சரணடைந்தனர். #Kerala #PriestRapeCase
பாவ மன்னிப்பு கேட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு - 2 பாதிரியார்கள் சரண்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொள்ளம் பகுதியில் தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறு குறித்து பாவ மன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை, அவர் கூறிய தகவலை வைத்துக் கொண்டு அந்த பாதிரியார் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த தகவலை இன்னும் சில பாதிரியார்களுக்கும் பகிர்ந்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அவரது கணவரின் மூலமாக வெளிவந்ததை அடுத்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற கேரளாவின் சில பாதிரியார்கள் முயற்சி செய்த தகவலும் அம்பலமானது.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 4 பாதிரியார்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் ஜாப் மேத்யூ, ஜான்சன் மேத்யூ ஆகிய இரண்டு பாதிரியார்களும் தாமாக முன்வந்து சரணடைந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.

இதேபோல், தலைமறைவாக இருந்த 2 பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த அமர்வு, அவர்களின் மனுவை நிராகரித்து சரணடையும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் திருவல்லா நீதிமன்றத்தின் முன்பும், பாதிரியார் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் போலீசாரிடமும் சரணடைந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இருவரும் சரணடைந்ததால், விரைவில் இவர்கள் ஜாமினில் வெளிவருவார்கள் என தெரிகிறது. #Kerala #PriestRapeCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com