53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த அண்ணனை டிவி நிகழ்ச்சி மூலம் கண்டுபிடித்த தம்பி

கேரளாவைச் சேர்ந்த ஒருவர், பிரிந்து சென்ற அண்ணனை 53 ஆண்டுகளுக்குப் பிறகு, டிவி நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.
53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துச் சென்ற சகோதரரை கட்டி அணைக்கும் உறவினர்.
53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துச் சென்ற சகோதரரை கட்டி அணைக்கும் உறவினர்.
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். அம்முதாசனின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். இவர்களில் 8 பேர் பிறந்ததுமே இறந்து விட்டனர். 6 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த பிறகு பிறந்ததால் அவருக்கு பெற்றோர் சகோதரியின் பெயரையும் சேர்த்து அம்முதாசன் என்று அழைத்தனர்.

அம்முதாசன் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து போன்றவற்றை நடத்தி வந்தார். இதற்காக வெளியூர் சென்ற போது அம்மினி என்ற பெண்ணை சந்தித்தார். இருவரும் காதல் வசப்பட்டனர். பின்னர் அம்முதாசன் குடும்பத்தை பிரிந்து அம்மினியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க சென்னை சென்றார். அங்கு கோடம்பாக்கத்தில் தங்கி இருந்து சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்தார். ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்கள் கிடைத்தது.

இதில் போதிய வருமானம் இல்லாததால் அம்முதாசன் மீண்டும் கேரளா திரும்பினார். நெடும்பாசேரியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.

அம்முதாசனின் மருமகன் ஒருவர் சமீபத்தில் மலையாள டெலிவி‌ஷன் சேனல் நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அப்போது மாமா அம்முதாசனையும் அழைத்துச் சென்றார். அவரை பற்றிய தகவல்களை கூறும் போது குடும்பத்தை பிரிந்து 53 ஆண்டுகளாகிறது என்றும் அவரின் இளமை கால சம்பவங்களையும் கூறினார்.

இந்த தகவல்கள் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பானது. அதனை கண்ணூரில் உள்ள சிலர் பார்த்தனர். அவர்களுக்கு அந்த நபர் அம்முதாசன் என தெரிய வந்தது. அவர்கள் இது பற்றி கண்ணூரில் வசித்த அம்முதாசனின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தனர்.

அவர் மூலம் அம்முதாசனுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் அவர்களின் குடும்ப விவரங்கள் பரிமாறப்பட்டன. இதன் மூலம் அம்முதாசனின் இளைய சகோதரர் பால கிருஷ்ணன் என்பதை இருவரும் உறுதி செய்து கொண்டனர்.

இதையடுத்து பால கிருஷ்ணணும், அம்முதாசனும் குடும்பத்தினருடன் சந்தித்தனர். அப்போது மகிழ்ச்சி மிகுதியில் கட்டி அணைத்து கொண்டனர். இது பார்த்தவர் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

53 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரை பிரிந்து சென்றவர் இப்போது மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது கண்ணூர் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com