

திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் இன்று நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மனிதச்சங்கிலி போராட்டம் 620 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்றது.
சுமார் 70 லட்சம்பேர் பங்கேற்ற இப்போராட்டம் வடக்கே கசரகாட் பகுதியையும் தெற்கே தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியையும் இணைக்கும் வகையில் மனிதச்சங்கிலி போராட்டமாக அமைந்தது.
மாநில முதல் மந்திரி பினராய் விஜயன் உள்பட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த மனிதச்சங்கிலி போராட்டம் கேரள வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய மனிதச்சங்கிலி போராட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.