

புதுடெல்லி:
ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையை அனைத்து முக்கிய கட்சிகளும் தொடங்கி விட்டன.
தேர்தலை தவிர்ப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு இருக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்முவின் பெயர் கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு பேசப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்.
மேலும் பெண் என்பதால் அவருக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும் என்று கூறப்படுகிறது. அது போல துணை ஜனாதிபதி பதவிக்கும் நாராயண யாதவ் பெயர் அடிபடுகிறது. இவருக்கு காங்கிரஸ் ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த சதாசிவம் பெயரும் அடிபடுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தற்போது கேரள மாநில கவர்னராக இருக்கிறார்.
விவசாய குடும்பத்தில் இருந்து வந்த அவருக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களிடமும் நல்ல நட்புறவு உண்டு. எனவே அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.