

திருவனந்தபுரம்:
கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த 20 மாதங்களில் 77,569 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த 20 மாதங்களில் 77,569 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள அவர், தற்போதைய அரசு பதவியேற்ற முதல் 20 மாதங்களில் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 2016 மே 25-ம் தேதியில் இருந்து, 2018 ஜனவரி 31-ம் தேதி வரையில், மொத்தமாக வேலை வாய்ப்பு பெற்றவர்களில் 64,982 பேருக்கு கேரளா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், 12,587 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் பணியில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் முதல் 20 மாதங்களில் 48,951 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. காலி பணியிடங்கள் சரியாக கண்காணிக்கப்பட்டு அதை உடனடியாக நிரப்பியதே இதற்கு முக்கிய காரணமாகும். அரசுப் பணியாளர் தேர்வாணையம் சரியான நேரங்களில் தேர்வுகள் நடத்தி, தரவரிசை பட்டியல் வெளியிட்டது அனைவரும் வேலை பெற பெரிதும் உதவியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaCM #PinarayiVijayan