பிரதமர் மோடியை சந்தித்ததில் எந்த பலனும் இல்லை - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள மாநில பிரச்சினைகளுக்காக பிரதமர் மோடியை சந்தித்ததில் எந்த பலனும் இல்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டி உள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்ததில் எந்த பலனும் இல்லை - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவவும் மத்திய அரசின் திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச பினராயி விஜயன் திட்டமிட்டார்.

இதற்காக அனுமதி கேட்டு கேரள அரசு சார்பில் பலமுறை பிரதமர் அலுவலகத்திற்கு கடிதங்களும் அனுப்பப்பட்டது. ஆனால் பினராயி விஜயனை பிரதமர் சந்திக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று பிரதமரை சந்திக்க பினராயி விஜயனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பினராயி விஜயன் தலைமையில் கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா, கேரள பா.ஜனதா முன்னாள் தலைவர் கிருஷ்ணதாஸ், மற்றும் அனைத்து கட்சியினரும் நேற்று டெல்லி சென்றனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கேரளாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டனர்.

பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்த சந்திப்பு அதிருப்தி அளித்திருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

பிரதமரை சந்தித்த போது கேரள மாநிலத்தில் நிலவும் பல முக்கிய பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறினோம். கேரளாவுக்கு மத்திய அரசின் உணவு தானிய ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி வற்புறுத்தி னோம். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவிக்வில்லை. பாலக்காட்டில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று நம்பினோம், ஆனால் மத்திய அரசிடம் அதுபோல எந்த திட்டமும் இல்லை என்பது எங்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்திற்கு பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பிரதமரை கேட்டுக்கொண்டோம். ஆனால் அதற்கு சாதகமாக அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. கேரளாவில் கடும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்வையிட்டு உதவ மத்திய குழுவை அனுப்ப கேட்டுக்கொண்டோம். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார். மாநில அரசு தேவையான நிலத்தை ஒதுக்கினால் அங்கமாலியில் இருந்து சபரிமலை வரை ரெயில் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் ஒப்புக்கொண்டார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கேரள மாநில பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசியதில் எந்த பலனும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.

பிரதமரை சந்தித்த இந்த குழுவில் கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானம் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக பிரனராய் விஜயனிடம் பிரதமர் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com