சபரிமலை விவகாரம் - கேரள சட்டப்பேரவை மூன்றாவது நாளாக ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
சபரிமலை விவகாரம் - கேரள சட்டப்பேரவை மூன்றாவது நாளாக ஒத்திவைப்பு
Published on

திருவனந்தபுரம் :

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை கடந்த இரு தினங்களாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 3-வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபரிமலை கோவில் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவை நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர், உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, சபரிமலையில் பக்தர்கள் நுழைவதை தடுக்கும்வகையில் பாஜகவும், தற்போது ஆட்சியில் உள்ள சிபிஐ அரசும் மறைமுகமாக கூட்டு சேர்ந்துள்ளன என கடுமையாக குற்றம் சாட்டினார். 

இதைத்தொடர்ந்து அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதால் சபாநாயகர் அவையை மூன்றாவது நாளாக ஒத்திவைத்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com