நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா

பிரிட்டனில் 32 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீத் வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கீத் வாஸ்
கீத் வாஸ்
Published on

லண்டன்:

இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் கீத் வாஸ் (வயது 62). இவர் 1985ம் ஆண்டு பிரிட்டனின் லெய்செஸ்டர் நகரில் குடியேறினார். 1987ம் ஆண்டில் முதன்முதலில் பாராளுமன்ற பொது சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அடுத்தடுத்த எட்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.  

பிரிட்டனில் உள்ள இந்திய சமூகத்தில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். மேலும் இந்தியாவில் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளார். தேர்தலின் போது அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரபல இந்திய நடிகர்கள் அவரது லெய்செஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் பயணம் செய்துள்ளனர்.

தனது செயல்களால் பொது சபையின் நற்பெயர் மற்றும் ஒருமைப்பாட்டை களங்கப்படுத்தியதாக பொது தரநிலைக் குழு சமீபத்தில் கண்டறிந்ததை அடுத்து வாஸ் ஆறு மாதங்கள் இடைநீக்கம் பெற்றார். போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் புகார்கள் போன்றவற்றிலும் அவர் சிக்கியுள்ளார் என கூறப்படுகின்றன. வரும் டிசம்பர் 12 ம் தேதி லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், கீத் வாஸ் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.

‘எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். 32 ஆண்டுகள் லெய்செஸ்டர் கிழக்கு தொகுதி எம்.பியாக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. லெய்செஸ்டர் மக்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். லெய்செஸ்டர் மக்கள் என்றும் எனது இதயத்தில் இருப்பார்கள்’, என தெரிவித்தார்.

போதைப்பொருட்கள் மற்றும் பாலியல் புகார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய முக்கிய தலைவர்கள் அறிவுறுத்தியதால் வாஸ், ராஜினாமா முடிவை அறிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com