

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டமன்றத்தில் எம்.எல்.சி. எனப்படும் மேல்-அவை உள்ளது.
இந்தநிலையில் டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. பூபதி ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இதையடுத்து காலியான அந்த எம்.எல்.சி. பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு இன்றுடன் முடிகிறது.
இந்த நிலையில் எம்.எல்.சி. பதவிக்கு முதல்வர் சந்திர சேகரராவின் மகளும், முன்னாள் எம்.பி.யுமான கவிதாவை வேட்பாளராக டி.ஆர்.எஸ். கட்சி அறிவித்தது.
இதையடுத்து அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். கவிதா, நிஜாமாபாத் பாராளுமன்ற தொகுதியில் எம்.பி.யாக இருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட கவிதா பா.ஜனதா வேட்பாளர் அரவிந்திடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.