

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் வாக்குச்சாவடிகளை குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர், வன்முறையின் போது பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் 8 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.
அப்போது, வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக, மனித கேடயமாக பரூக் அகமது தார் என்பவர் ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் கட்டிவைக்கப்பட்டார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜீப்பில் மனித கேடயமாக ஒருவர் கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அம்மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், ஜீப்பில் கட்டப்பட்ட பரூக் அகமது தார்-க்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆறு வார காலத்திற்குள் இந்த தொகை அவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.