காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கால்பந்து வீரர்: ராணுவத்தில் சரணடைந்தார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கால்பந்து வீரர் ராணுவத்தில் சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கால்பந்து வீரர்: ராணுவத்தில் சரணடைந்தார்
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களிடையே தீவிரவாதத்தை வேரூன்றச் செய்யும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, தீவிரவாத இயக்கங்களில்  சேர்க்கப்படுகின்றனர். தீவிரவாதத்தால் தூண்டப்படும் இளைஞர்களின் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு சமீபத்திய உதாரணமாக 20 வயதே நிரம்பிய மாவட்ட அளவிலான கால்பந்து வீரர் மஜித் கான், சில தினங்களுக்கு முன் தீவிரவாத இயக்கத்திற்காக ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏ.கே.-47 துப்பாக்கியுடன் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  அவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது. தீவிரவாத பாதையை தேர்வு செய்வதற்கு முன் மஜித், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆனால், ஏற்கனவே தீவிரவாத இயக்கத்தில் இணைந்த உள்ளூர் இளைஞர்களின் பேச்சு அவரை இந்த அளவிற்கு மாற்றியிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.

இந்நிலையில், மஜித் போலீசில் சரணடைந்து  விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு தெற்கு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் சரணடைந்தார். தனது ஆயுதங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தார் மஜித். மஜித்தின் பெற்றோர் மகனை சரணடைய கூறி வலியுறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் மஜித் சரண்டைந்தது குறிப்பிடத்தக்கது.

மஜித் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையின் படி மஜித்தை விடுதலை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com