கா‌‌ஷ்மீரில் மத்திய போலீஸ் உதவி தொலைபேசி எண்ணுக்கு 34 ஆயிரம் அழைப்புகள்

கா‌‌ஷ்மீரில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதில் இருந்து மத்திய போலீஸ் உதவி தொலைபேசி எண்களுக்கு இதுவரை 34,274 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் காவலர்
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் காவலர்
Published on

புதுடெல்லி:

கா‌‌ஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் அவசர உதவிக்காக 14411 என்ற ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதி உள்ளது. ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அங்கு 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதில் இருந்து ஏராளமான அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த தொலைபேசி இடையில் இயங்காத சமயத்தில் சில செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டது. இந்த எண்களுக்கு இதுவரை 34,274 அழைப்புகள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை பொதுமக்கள் கா‌‌ஷ்மீரில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோரின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காகவே அழைத்தவை.

இதுதவிர அவசர உதவி கேட்டு 1,227 அழைப்புகள் வந்துள்ளன. இதுபோன்ற நேரங்களில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று அழைத்தவரையும், குடும்பத்தினரையும் பேச வைக்கின்றனர். மேலும் விமான டிக்கெட்டுகள் வழங்குவதற்கு, தேர்வு, நேர்முக தேர்வு தேதிகள் மாற்றம் பற்றி தெரிவிப்பதற்கு போன்ற பலவற்றுக்கும் போலீசார் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று வருகிறார்கள். சிறுநீரக நோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்ற பலவகை நோயாளிகள் 123 பேர் அழைத்துள்ளனர். அவர்களுக்கு மருந்துகளையும் போலீசார் கொண்டு சென்று கொடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com