

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கடந்த மாதம் 28-ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் உள்ள சி.பி.ஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. பின்னர் அவரது விசாரணைக் காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். மும்பை சிறைக்கு அழைத்துச் சென்று இவ்வழக்கில் தொடர்புடைய இந்திராணி முகர்ஜி முன்னிலையில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நலையில், 5 நாள் விசாரணைக் காவல் முடிந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் இன்று மீண்டும் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கார்த்தி சிதம்பரத்திடம் மேலும் விசாரணை நடத்தி வழக்கு தொடர்பான தகவல்களை பெற வேண்டியிருப்பதால், விசாரைணக் காவலை நீட்டிக்கக் கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம், கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையையொட்டி ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.