சையத் முஷ்டாக் அலி டிராபி - பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாட்டை வீழ்த்தி கர்நாடகா பட்டம் வென்றது

குஜராத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கர்நாடக அணி
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கர்நாடக அணி
Published on

அகமதாபாத்:

சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, கர்நாடக அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் மனீஷ் பாண்டே சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார். தேவ்தத் படிக்கல் 32 ரன்னும், ரோஹன் கதம் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், கர்நாடகா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. 

தமிழ்நாடு சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின்,முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. முன்னணி ஆட்டக்காரர்கள் ஓரளவு ரன் எடுத்தனர்.

ஷாருக் கான் 16 ரன், ஹரி நிஷாந்த் 14 ரன், வாஷிங்டன் சுந்தர் 24 ரன், தினேஷ் கார்த்திக் 20 ரன் எடுத்து அவுட்டாகினர். தமிழக அணியில் பாபா அபராஜித் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 43 ரன்னில் ரன் அவுட்டானார். அவருக்கு ரவிசந்திரன் அஷ்வின் ஒத்துழைப்பு கொடுத்தார்.

கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட தமிழக அணி ஒரு ரன் மட்டுமே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com