கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் - புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #KarnatakaCabinet
கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் - புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
Published on

கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.

பின்னர் முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேலிடப் பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், வேணுகோபால் ஆகியோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர்கள் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், மஜதவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்காத நிலையில், 7 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#KarnatakaCabinet

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com