மாணவர்கள் தற்கொலையில் தென்இந்தியாவில் கர்நாடகத்துக்கு 2-வது இடம் - அதிர்ச்சி தகவல்

மாணவர்கள் தற்கொலையில் தென்இந்தியாவில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் தற்கொலையில் தென்இந்தியாவில் கர்நாடகத்துக்கு 2-வது இடம் - அதிர்ச்சி தகவல்
Published on

பெங்களூரு:

நாட்டில் நாளுக்கு நாள் மாணவர்களின் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு வகைகளில் அவர்களிடம் உருவாகும் மனஅழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த முடிவு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் உள்ளது. அந்த ஆய்வு முடிவு பற்றிய விவரம் வருமாறு-

கர்நாடகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் மாணவ-மாணவிகள் என மொத்தம் 540 பேர் தற்கொலைகள் செய்துள்ளனர். இந்த வகையில் தினமும் ஒரு மாணவர் வீதம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதே ஆண்டில் தமிழகத்தில் 981 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதேபோல் 2016-ம் ஆண்டில் ஆந்திராவில் 295 மாணவர்களும், தெலுங்கானாவில் 349 மாணவர்களுகம், கேரளாவில் 340 மாணவர்களுக்கும் தற்கொலைகள் செய்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மாணவர்கள் தற்கொலையில் தென்இந்தியாவில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் தமிழகமும், கடைசி இடத்தில் ஆந்திராவும் உள்ளன. இந்த 3 ஆண்டில் தமிழகத்தில் 2,789 மாணவர்களும், கர்நாடகத்தில் 1,707 மாணவர்களும், தெலுங்கானாவில் 1,193 மாணவர்களும், கேரளாவில் 1,132 மாணவர்களும், ஆந்திராவில் 988 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மாணவர்களின் இந்த தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெரும்பான்மையான மாணவர்கள் மனஅழுத்தத்தினால் உயிரை மாய்த்து கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். போதைக்கு அடிமையாகி மீள முடியாமல் மனம் உடைந்து தற்கொலை செய்யும் சம்பவங்களும் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக அந்த ஆய்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com