

காரிமங்கலம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தீவிர வாகன சோதனை நடத்த காரிமங்கலம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் மாவட்ட எல்லையான டி.குண்டு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் தவிடு மூட்டைகளுடன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அடங்கிய 53 மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தென்குமரை பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 42), வடகுமரையை சேர்ந்த யுவராஜ் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடியை சேர்ந்த மணி என்கிற சுப்பிரமணிக்கு சொந்தமான லாரி என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குட்கா மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மினி லாரி உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையடுத்து கைதான இருவரையும் பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.