

காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நரிக்குடியை அடுத்துள்ளது இருஞ்சிறை கிராமம். இங்குள்ள கண்மாய் பகுதியில் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனே நரிக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்தப்பகுதியில் தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். பிணமாக கிடந்த வாலிபரின் உடலில் 29 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. எனவே முன் விரோதத்தில் மர்ம நபர்கள் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.