கண்ணமங்கலம் அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலி

கண்ணமங்கலம் அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலி
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் நாகநதி கொல்லமேட்டில் வசிக்கும் தனியார் பஸ் கண்டக்டர் தமிழரசன் (35). இவரது மனைவி தமிழரசி (27) இவர்களுக்கு ரீதீஷ் என்ற மூன்றரை வயது மகன், யுகேஷ் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. இதில் ரீத்தீஷ் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான்.

நேற்று மாலை தமிழரசன், தனது மகன் ரீதீஷை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் கல்பட்டு காளியம்மன் கோயில் சாலையில் பார்வைக் குறைவான வளைவில் சென்றபோது, எதிரே கல்பட்டு மலையடிவாரத்தில் இருந்து சூளைமண் எடுத்துச் சென்ற டிப்பர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தமிழரசன் உயிரிழந்தார்.

மகன் ரீத்தீஷ் லேசான காயங்களுடன் உயிர்தப்பினான் இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சாலை மிகவும் குறுகலாக உள்ள இடத்தில் வேகமாக லாரி வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என மறியல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தபின்னர், பிணத்தை பிரேதப் பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com