அபராஜித் அரை சதம் - திருச்சி வாரியர்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது காஞ்சி வீரன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடந்த மற்றொரு போட்டியில், அபராஜித் அரை சதத்தால் திருச்சி வாரியர்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது காஞ்சி வீரன்ஸ் அணி.
அதிரடியாக ஆடிய அபராஜித்
அதிரடியாக ஆடிய அபராஜித்
Published on

நெல்லை:

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ்  அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் ஆட்டம் நெல்லையில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக நியான் ஷியாம் காங்கயன் மற்றும் கே.முகுந்த் ஆகியோர் களமிறங்கினர். நியான் ஷியாம் காங்கயன் 2 ரன்னிலும், சத்ய நாராயணன் 2 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். 

அதன்பின், ஜோடி சேர்ந்த கே.முகுந்த் மற்றும் ஆதித்யா கணேஷ் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். இதில் கே.முகுந்த் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஓரளவு தாக்குப் பிடித்த ஆதித்யா கணேஷ் 43 ரன்னிலும், மாருதி ராகவ் 15 ரன்னிலும், சாய் கிஷோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது.

காஞ்சி வீரன்ஸ் அணி சார்பில் சுதேஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், சஞ்சய் யாதவ்,  பாபா அபராஜித் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் விஷால் வைத்யாவும், சுரேஷ் லோகேஷ்வரும் இறங்கினர். விஷால் 15 ரன்னிலும், சுரேஷ் 40 ரன்னிலும், சுகேந்திரன்  3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய கேப்டன் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 39 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது காஞ்ச் வீரன்ஸ் அணி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com