காஞ்சீபுரத்தில் ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை

காஞ்சீபுரத்தில் நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமல்கான். இவரது மகன் நிவாஸ்கான் (25). பிரபல ரவுடி.

இவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் ஆறு கொலை முயற்சி வழக்குகள் காஞ்சி தாலுக்கா காவல் நிலையம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் மற்றும் பாலுசெட்டி காவல் நிலையத்தில் உள்ளன.

நேற்று மாலை நிவாஸ் கான் மோட்டார் சைக்கிளில் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்.நகர் வழியாக சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென அவரை வழிமறித்தனர்.

அவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் நிவாஸ்கானை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே நிவாஸ்கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் பிள்ளையார்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவரை சிலர் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் பிரபா, காக்கா சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு ரவுடி கொலை செய்யப்பட்டது காஞ்சீபுரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி நிவாஸ்கானை பழிக்குப்பழியாக தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களுடன் மோதலில் இருந்தவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com