அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் போட்டியா?

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். #KamalaHarris #PresidentElection
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் போட்டியா?
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார்.

மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது.

எனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என தற்போது கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் தலைவரை தேர்வு செய்வதற்கான கூடுதல் பொறுப்பை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

யார் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்? யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவார்? யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவார்? அதிகாரத்தில் இல்லாத போதும் யார் தங்களுக்காக குரல் கொடுப்பார்? ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் அவர்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக ஏற்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

அந்த பெண் நான் என்று கூறவில்லை. அமெரிக்க மக்களை பற்றி கூறுகிறேன். அதே சமயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் நான் முடிவு எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேட்டியின் போது கமலா ஹாரிஸ் ஜனாதிபதி டிரம்பை விமர்சிக்கவும் தவறவில்லை. மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப் குழந்தையை போல் நடந்துகொள்கிறார் என அவர் சாடினார்.

இது பற்றி அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் டிரம்பின் முடிவு அமெரிக்க மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி இருக்கிறது.

அதிபரின் தற்பெருமை திட்டத்துக்காக 8 லட்சம் அரசு ஊழியர்களை வேலைக்கு செல்லவிடாமல் முடக்கிவைத்திருப்பது தவறான செயலாகும்” என தெரிவித்தார்.

மேலும் “அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் எல்லையில் சுவர் எழுப்ப தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துவது, 11 வயதான என்னுடைய பேரன் அவனுடைய பொம்மை காரை கேட்டு அடம் பிடிப்பதை போல் உள்ளது” என கிண்டல் அடித்தார்.  #KamalaHarris #PresidentElection

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com