

தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் என்னோடு கைகோர்ப்பார்கள் என்று கூறி வரும் கமல் தனது அரசியல் பயணத்தில் நற்பணிகள் மூலமாகவே மக்களை எளிதாக சென்றடைய முடியும் என்று கணக்கு போட்டு வைத்துள்ளார்.
இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க அவர் முடிவு செய்துள்ளார். கமல் இன்று சென்னை திரும்பியதும் இதற்கான ஆரம்ப கட்டபணிகள் தொடங்க உள்ளன. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 16 உயர் மட்ட குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த 8 கிராமங்களும் தேர்வு செய்யப்பட உள்ளன.
இந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தனது கட்சி சார்பில் முழுமையாக செய்து கொடுக்கவும் கமல் திட்டமிட்டுள்ளார். அதற்கான தேவைகள் என்ன? முன்னேற்பாடாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றியும் கமல் ஆலோசனை நடத்த உள்ளார்.