

நடிகர் கமல்ஹாசன் வருகிற 7-ந்தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வார இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் மோடியையும் அமித்ஷாவையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
மோடி, அமித்ஷா பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-
“நாகலாந்துக்கு போகும்போது கொம்பு வைத்த தொப்பி போட்டுக் கொண்டு நடனம் ஆடுவார்கள். அம்பு விடும் கூட்டத்துக்கு போய் அம்புவிட்டுவிட்டு அதன்பிறகு அதை தொடவே மாட்டார்கள்.
இந்தியை பொறுத்தவரை நமக்கு வெறுப்பு கிடையாது. எந்த மொழி மீதும் வெறுப்பு கிடையாது. இதை வட இந்தியாவில் வசிப்பவர்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். மற்ற மொழிகள்மீது வெறுப்பு இருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோஷமாக வங்கமொழியில் நாம் தேசிய கீதம் பாடுவோமா” என்று கூறியுள்ளார்.
அரசியலுக்கு வரவேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறிய அறிவுரைக்கு பதில் அளித்துள்ள கமல் “எனக்கு நெருங்கிய நண்பர் அவர். ஆனால், அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா அறிவுரைகளையும் கேட்டுக்கொள்ளலாமே தவிர அதன்படி நடக்கவேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.