பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகம் - கமல்ஹாசன் திறந்து வைத்தார்

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகம் - கமல்ஹாசன் திறந்து வைத்தார்
Published on

பொள்ளாச்சி:

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மதியம் பொள்ளாச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் கார் மூலம் பொள்ளாச்சி வந்தார். மாலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு 7.30 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெற்ற பலூன் திருவிழாவை பார்வையிட்டார். இரவு மக்கள் நீதி மய்ய துணைத் தலைவரும், வேட்பாளர்கள் தேர்வுக் குழு தலைவருமான டாக்டர். மகேந்திரன் வீட்டில் தங்கினார்.

இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பொள்ளாச்சி மகாலிங்க புரத்தில் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று அலுவலகத்தை திறந்துவைத்தார். 11 மணிக்கு பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் பல்வேறு துறைகளில் சேவை புரிந்த 12 பேருக்கு சான்றோன் விருதை வழங்கினார்.

டாக்டர்கள் உத்தர்ராஜ், கண்ணகி உத்தர்ராஜ் ஆகியோருக்கு மருத்துவ துறைக்காகவும், லட்சுமி டெக்டைல்ஸ் நிறுவனத்திற்கு சமூக நிறுவனத்திற்காகவும், கல்கி சுப்ரமணியத்திற்கு சமூக செயற்பாட்டிற்காகவும் விருது வழங்கப்பட்டது.

தாகம் அமைப்பிற்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும், பியூஜன் டிரஸ்ட் அமைப்புக்கு இளைஞர் சேவைக்காகவும், இயற்கை விவசாயத்திற்காக மது ராமகிருஷ்ணனுக்கும், பலவகை பயிர் விவசாயத்திற்காக ஓ.வி.ஆர். சோம சுந்தரத்திற்கும், கிராமப்புற வளர்ச்சி உதவிக்கு மணி சுந்தருக்கும், கலை மற்றும் இலக்கியத்திற்காக கவிஞர் சிற்பி பாலசுப்ர மணியத்திற்கும், விருது வழங்கப்பட்டது.

கட்டபொம்மன் பன்னாட்டு கலைக் குழுவிற்கு பாரம்பரிய கலைகளுக்காகவும், நேயத்திற்காக சந்திர சேகர் சண்முகசுந்தரத்திற்கு, சமூக சேவைக்காக சுகுமாருக்கும் என மொத்தம் 12 பேர்களுக்கு சான்றோன் விருதை கமல்ஹாசன் வழங்கினார்.

இந்த சான்றோன் விருது பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. கட்சி சார்பில் வழங்கப்படும் சான்றோன் என்ற விருது முதலில் பொள்ளாச்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் இந்த விருதுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். இதில் மேற்கு மண்டல அளவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மண்டல அளவிலான கட்சியின் முதல் கலந்துரையாடல் கூட்டமும் முதன்முதலாக பொள்ளாச்சியில்தான் நடைபெற்றது.

இன்று மாலை பொள்ளாச்சி சிங்காநல்லூரில் தேவர் மகன் படப்பிடிப்பு எடுத்த வீட்டை கமல்ஹாசன் பார்வையிடுகிறார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

ஆனைமலையில் மக்கள் சந்திப்பும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

பின்னர் இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com