

அலிகர்:
பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் (வயது 89) நேற்று காலமானார். அவரது உடல் லக்னோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, கல்யாண் சிங் உடல், லக்னோவில் இருந்து அவரது சொந்த ஊரான அலிகாருக்கு கொண்டு வரப்பட்டு, மகாராணி அகில்யாபாய் கோல்கர் ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். நாளை பிற்பகல் புலந்த்சாகரில் உள்ள கங்கை நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான கல்யாண் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை செயல்படாது என்றும் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.