

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அம்மாநில முதல்-மந்திரியாக கல்யாண் சிங் பதவி வகித்தார்.
பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருடன் கல்யாண் சிங்கும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக கல்யாண் சிங்குக்கு சம்மன் அனுப்பக்கோரி லக்னோ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று, கல்யாண் சிங் 27-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென நீதிபதி எஸ்.கே.யாதவ் சம்மன் அனுப்பினார்.
அதன்படி, கல்யாண் சிங் இன்று நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார். கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான் நீதிமன்றத்தை எப்போதும் மதிப்பவன். ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனுக்கு மதிப்பளித்து இன்று நான் வந்துள்ளேன் என குறிப்பிட்டார்.
இதேவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஏற்கனவே ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில் கல்யாண் சிங்கின் வழக்கறிஞர் மணிஷ் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.