

களக்காடு:
பத்தமடை அருகே இடைஞ்சான்குளம் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி ஆடு ஒன்று பழத்திற்குள் வைத்திருந்த வெடியை கடித்ததில்
படுகாயம் அடைந்து உயிரிழந்தது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மூலம் வனவிலங்குகள் பாதிக்காத வகையில் களக்காடு வனச்சரகர்
பாலாஜி, வனவர் சந்திரன் ஆகியோர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், களக்காட்டை அடுத்த பத்மனேரி அருகே வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரசு காப்புக்காட்டுக்கு வெளியே கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளை வெடி வைத்து வேட்டையாட முயன்றதாக, மஞ்சுவிளையை சேர்ந்த அன்னபாண்டி (வயது 36), கீழவடகரையை சேர்ந்த சுப்ரமணியன் (52) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.