கடம்பூர் செல்லும் வழியில் பட்டப்பகலில் ரோட்டில் பாய்ந்து சென்ற புலி

கடம்பூர் செல்லும் வழியில் பட்டப்பகலில் பெரிய புலி ஒன்று பாய்ந்து ரோட்டை கடந்து ஓடியது. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கடம்பூர் செல்லும் வழியில் பட்டப்பகலில் ரோட்டில் பாய்ந்து சென்ற புலி
Published on

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் மலையிலும் தற்போது புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.

இதை உறுதி படுத்தும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினர் கண்ணில் புலிகள் நடமாட்டம் சிக்கி உள்ளது.

தற்போது பொதுமக்கள் பார்வையிலும் அதுவும் ரோட்டிலேயே புலி நடமாட்டமும் இருப்பது தெரிய வந்துள்ளது.

சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ள கடம்பூரில் இருந்து ஒரு வேனில் டிரைவர் உள்பட 4 பேர் சத்தியமங்கலம் நோக்கி நேற்று மதியம் வந்தனர்.

கடம்பூர் அடுத்து ரோட்டில் ஒரு சிறிய குகை வடிவில் மல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் அந்த வேன் வந்த போது திடீரென விருட்டென்று பெரிய புலி ஒன்று பாய்ந்து ரோட்டை கடந்து ஓடியது.

வேனில் வந்த ஏலாஞ்சி ஊரை சேர்ந்த அங்கியம்மாள், கரளியத்தை சேர்ந்த பெரியசாமி, பழனிசாமி, மற்றும் டிரைவர் ஆகியோர் இந்த அரிய காட்சியை கண்டு அதிர்ச்சி கலந்த பரவசம் அடைந்தனர்.

மலையை விட்டு கீழே இறங்கி நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த இவர்கள் தாங்கள் கடம்பூர் அருகே புலியை பார்த்த திகில் அனுபவத்தை அந்த பகுதி மக்களிடம் கூறி வியப்படைந்தனர்.

இதே போல கடந்த சில தினங்களுக்கு முன் கடம்பூர் மலை அடிவாரம் உள்ள வன சோதனை சாவடி அருகே குட்டிப்புலி ஒன்று நடமாடியதையும் சிலர் பார்த்து வியப்படைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com