சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை தேவஸ்தானம் உறுதி செய்ய வேண்டும் - கேரள மந்திரி கருத்து

சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு ஆகும் என்று கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். #KadakampallySurendran
சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை தேவஸ்தானம் உறுதி செய்ய வேண்டும் - கேரள மந்திரி கருத்து
Published on

திருவனந்தபுரம்:

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு. அதைத்தான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசின் முடிவு நியாயப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சபரிமலையில் மட்டுமின்றி ஆராதனை கோவில்கள் எதுவானாலும், பெண்களை தனிமைப்படுத்துவது அவர்களை அவமதிப்பதற்கு சமமானது. சாதி, மத, பேதம் இன்றி அனைத்து மக்களும் தரிசிக்கும் சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் ஆகும். இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மூலம் நியாயம் கிடைத்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தவேண்டியதும், அங்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு ஆகும். இதுகுறித்து தேவஸ்தானம் போர்டு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி தீர்மானிக்கப்படும்.

கால மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சியை ஏற்று கொள்ளும் மக்கள், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.  #KadakampallySurendran

X

Maalai Malar
www.maalaimalar.com