திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்

கச்சிராயப்பாளையம் அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலியை துப்பட்டாவால் இறுக்கி காதலன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட அமராவதி, கைதான குணசேகரன்
கொலை செய்யப்பட்ட அமராவதி, கைதான குணசேகரன்
Published on

கச்சிராயப்பாளையம்:

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள வடக்கனந்தல் காமராஜர் நகரை சேர்ந்தவர் அழகப்பிள்ளை. விவசாயி. இவரது மகள் அமராவதி (வயது 20). டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (28). இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் குணசேகரனுக்கும், அமராவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அமராவதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் கவலை அடைந்த அவரது பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று மாலையில் வடக்கனந்தலில் உள்ள காட்டுப்பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அங்குள்ள கிணற்றில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கச்சிராயப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம், கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மாணிக்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். அங்கு பிணமாக கிடந்தது அமராவதி என்பது தெரிய வந்தது.

போலீசார் அமராவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அமராவதியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் குணசேகரன் காதலித்து வந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குணசேகரன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குணசேகரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமராவதியை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து குணசேகரனை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நானும், அமராவதியும் கடந்த 1½ ஆண்டாக காதலித்து வந்தோம். கடந்த 28-ந் தேதி இரவு 8 மணிக்கு அமராவதி என்னுடன் செல்போனில் பேசினாள். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளிக்கு வருமாறு கூறினாள். நான் அங்கு சென்று காத்திருந்தேன்.

9 மணி அளவில் அமராவதி அங்கு வந்தாள். பின்னர் நாங்கள் இருவரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது அமராவதி, எங்கள் வீட்டில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்து வந்துள்ளேன். நாம் 2 பேரும் கேரளா மாநிலம் சென்று அங்கு வைத்து திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்றாள்.

நான் அதற்கு மறுத்து விட்டேன். ஆனால், அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். மேலும் அவள் எனது சட்டையை பிடித்து இழுத்தாள்.

இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். பின்னர் அமராவதி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து, அவளது கழுத்தை இறுக்கினேன். சிறிது நேரத்தில் அவள் மூச்சு திணறி இறந்து விட்டாள். இதையறிந்த நான், அவளது உடலை தூக்கி சென்று அருகில் உள்ள கிணற்றில் வீசினேன்.

அதன் பின்னர் அமராவதி கொண்டு வந்த பணத்தை வைத்து கடந்த 4 நாட்களாக ஜாலியாக செலவு செய்தேன். ஆனால், போலீசார் துப்பு துலக்கி என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட குணசேகரனை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்துகிறார்கள்.

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலியை துப்பட்டாவால் இறுக்கி காதலன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com