

புதுடெல்லி:
காஷ்மீரில் செயல்பட்டு வந்த பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது, அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. எனவே, அவரை காஷ்மீரில் கடந்த மாதம் 25-ஆம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
ஷபீர் ஷாவின் விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஷபீர் ஷாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, அவர் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.