விமர்சனங்களை தாங்கக்கூடியவர்களாக நீதிபதிகள் இருக்க வேண்டும் - தலைமை நீதிபதி பேச்சு

தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
விமர்சனங்களை தாங்கக்கூடியவர்களாக நீதிபதிகள் இருக்க வேண்டும் - தலைமை நீதிபதி பேச்சு
Published on

சென்னை:

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.

இந்த பயிற்சி நிறைவு விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நான் 16 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி பதவி வகிக்கிறேன். நான் சிறந்த தீர்ப்பு வழங்கினேன் என்றால் அது என்னுடைய தீர்ப்பு என்று மட்டும் சொல்லமுடியாது. அந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களின் திறமையான வாதமும் காரணம் என்று கூறவேண்டும். வக்கீல்கள் பல தரப்பட்ட தீர்ப்புகளின் விவரங்களையும், சட்டங்களை எடுத்துரைத்து சிறப்பாக வாதம் செய்தால்தான் சிறப்பான தீர்ப்பை ஒரு நீதிபதியால் பிறப்பிக்க முடியும்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளின் மூலமாக பேசவேண்டும். தீர்ப்புகள் தான் நீதிபதிகளை எடைபோடும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்க்கும்போது, நீதி வழங்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவேண்டும். நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாகவோ, சாதகமாகவோ செயல்படக்கூடாது. ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்கவேண்டும். விமர்சனங்களை தாங்கக்கூடிய பாறைகளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் நிர்வாக அறங்காவலர் வெற்றி துரைசாமி நினைவு பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com