

சென்னை:
தரமணியில் உள்ள ராமானுஜம் ஐ.டி. பார்க் நிறுவனம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இளம் இந்திய குரல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தி ரிவர் என்ஜிஓ நிறுவனர் டாக்டர் மதுசரண் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
நான் எனது 25-வது வயதில் அரசியலுக்கு வந்தேன். எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது புரட்சி தலைவி அம்மா அவர்கள் என்னை அரசியலுக்கு அழைத்து எம்.பி.யாக்கினார். என்னைப் போன்ற இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். உங்களால் தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனது எம்.பி. பதவியின் மூலம் தென் சென்னை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
மீண்டும் வெற்றி பெற்று மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை தொகுதி மக்களுக்கு கொண்டு வருவேன். தினமும் 100 பேருக்கு சிகிச்சை அளித்து வந்த நான் இன்று எம்.பி. பதவி மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொண்டு செய்து வருகிறேன். ஐ.டி. ஊழியர்கள் முதலாளிகளை எளிதில் தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019