சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தெருவில் விளையாடிய 6-ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம நபர்கள்

ஜெயங்கொண்டம் அருகே சாக்லேட் வாங்கி தருவதாக கூறி 6 வகுப்பு மாணவியை கடத்திய மர்ம நபர்கள் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் சாலையோரம் விட்டு சென்றனர்.
சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தெருவில் விளையாடிய 6-ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம நபர்கள்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கறிகோழி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வகுமாரி ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகள் ராகவி (வயது 12), துழாரங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ராகவி இரவு 7 மணி அளவில் தெருவில் தனது தம்பி மற்றும் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராகவியுடன் பேச்சுக்கொடுத்தனர். பின்னர் அவரிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அருகிலுள்ள கடைக்கு அழைத்து சென்றனர். மிகவும் அக்கறையுடன் பேசியதால் அவர்களை நம்பி ராகவியும் மோட்டார் சைக்களில் ஏறினார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இரண்டு நபர்களும் வாகனத்தை பின் தொடர்ந்து நடந்து சென்றனர். அப்பகுதியில் இருந்த கடையை தாண்டி நிற்காமல் சென்றதால் ராகவி அதிர்ச்சி அடைந்தார்.

இதைப்பார்த்த ராகவியின் தம்பியும், தோழியும் கூச்சல் போட்டனர். பின்னர் பெற்றோரிடம் சென்று கூறினர். உடனடியாக ராகவியின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட சிலர் மோட்டார் சைக்கிளில் துரத்தினர். மக்கள் துரத்துவதை பார்த்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்து மறைந்து விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் உடையார்பாளையம் போலீசார் அருகில் உள்ள தா.பழூர், வி.கைகாட்டி காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் மணகெதி கிராம பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாணவி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் பொதுமக்கள் சென்று ராகவி மீட்டனர். போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை மற்றும் ஆங்காங்கே ரோந்து பணியை தீவிரப்படுத்தியதையும், பொதுமக்கள் தேடுவதையும் அறிந்த மர்ம நபர்கள் ராகவியை இறக்கி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து மாணவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் ராகவியை கடத்திய மர்ம நபர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? ரவிச்சந்திரனுக்கு விரோதிகள் யாராவது இருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இடையார் கிராம பொதுமக்கள் கடத்தல்காரர்களை விரைந்து பிடிக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் உடையார்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் தலைமையில் போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் மர்ம நபர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com