

சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ காட்சியை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த 20ந் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில் புது வண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வெற்றிவேல் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்குகளில் தன்னை போலீசார் கைது செய்து விடக்கூடாது என்பதற்காக, முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், வெற்றிவேல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, வெற்றிவேலுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், வெற்றிவேல் முன்ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ராஜ மாணிக்கம் முன்பு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.