வாய்மொழி உத்தரவு மூலமாகவே ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது - மருத்துவர் பாலாஜி

ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையிலேயே தேர்தல் ஆவணங்களில் கைரேகை பெறப்பட்டதாக அரசு மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார். #JayaDeath
வாய்மொழி உத்தரவு மூலமாகவே ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது - மருத்துவர் பாலாஜி
Published on

புதுடெல்லி:

கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய போது, சுப்ரீம் கோர்ட்டில் ஏ.கே போஸ் முறையிட்டு விசாரணைக்கு தடை வாங்கினார். இதனை அடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் சரவணன் முறையிட்டார்.

அதன் அடிப்படையில், ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற அரசு மருத்துவர் பாலாஜி இரண்டு முறை ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், இன்று மூன்றாவது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதாவிடம் கைரேகை பெற எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் தலைமைச்செயலாளரிடம் இருந்து வரவில்லை என பாலாஜி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையிலே ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. #JayaDeath #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com