தடயவியல் பரிசோதனைக்கு செல்கிறது ஜெயலலிதா கைரேகை: சரவணன் கோரிக்கையை நீதிபதி ஏற்றார்

ஜெயலலிதா கைரேகையை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் சரவணனின் கோரிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்றார்
தடயவியல் பரிசோதனைக்கு  செல்கிறது ஜெயலலிதா கைரேகை: சரவணன் கோரிக்கையை நீதிபதி ஏற்றார்
Published on

டாக்டர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று 2-வது நாளாக விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்களை வழங்கினேன். அதோடு ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட ஒரு போர்ஜரி கடிதத்தையும் வழங்கினேன். இந்த கடிதம் அன்றைய கவர்னருக்கு ஜெயலலிதாவால் அனுப்பப்பட்டதாகும்.

என்னுடைய விசாரணை முடிந்து விட்டது. தேவை என்றால் விசாரணைக்கு அழைப்பதாக கூறி உள்ளனர்.

அறிக்கையில் உள்ளதை எடுத்து சொல்லி உள்ளேன். விசாரணை கமி‌ஷன் அதை தேவைப்படும் போது பெற்றுக் கொள்வதாக கூறி உள்ளனர்.

ஜெயலலிதாவின் கைரேகையையும் அவரது கடிதத்தில் உள்ள கையெழுத்தையும் அரசு தரப்பில் தடய அறிவியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

ஜெயலலிதாவின் பழைய கையெழுத்துக்கும், ஆஸ்பத்திரியில் இருந்த போது போடப்பட்டதாக கூறப்படும் கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் நாங்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளோம்.

போர்ஜரிக்கான முகாந்திரம் இருக்கிறது என்றோம். இது தொடர்பாக ஆய்வு செய்யும்படி கேட்டுள்ளோம். அதற்கு நீதிபதி ஆய்வுக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார்.

இன்றைய விசாரணையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ள சந்தேகங்களை நீதிபதி கேட்டறிந்தார். அதையும் நான் தெளிவுபடுத்தினேன்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி அன்றாடம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்புக்கும், உண்மையில் மருத்துவ சீட்டில் உள்ள விவரங்களுக்கும் நிறைய மாறுபாடு காணப்பட்டது.

குறிப்பாக எந்த இடத்திலும் ஜெயலலிதா சுயநினைவில் இருந்ததாக அதில் குறிப்பிடப்படவில்லை

அதனால் அந்த மருத்துவ அறிக்கையை 7.12.16-ல் ஒரு டீம் ஆப் டாக்டர் உட்கார்ந்து அதை தயார் செய்தது போல் தெரிகிறது.

சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அதை தயார் செய்துள்ளதாக தெரிகிறது.

கைரேகைகளை உறுதி செய்த அரசு மருத்துவர் பாலாஜியை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சொல்லி உள்ளேன். தக்க நேரத்தில் வேண்டிய நேரத்தில் விசாரிக்க நான் கட்டுப்படுவதாக கூறி உள்ளேன்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றோம்.

இதற்காக அரசு ஒரு கமிட்டி அமைத்ததாக கூறுகிறார்கள். செப்டம்பர் 30-ந் தேதி 5 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

இதில் டாக்டர் பாலாஜியை மட்டும் நமக்கு தெரியும். மற்ற 4 டாக்டர்கள் பற்றி நமக்கு தெரியாது. அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

மருத்துவ கல்லூரி முன்னாள் இயக்குனர்கள் விமலா, நாராயண பாபு ஆகிய 2 பேர் இன்று ஆஜராகி உள்ளனர்.

என்னைப் பொருத்தவரை ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தது டாக்டர் பாலாஜிதான். மற்றபடி யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர்களே கூறி விட்டனர். அதனால் இவர்கள் சொல்லும் கருத்து எந்த அளவு எடுபடும் என சொல்லமுடியாது.

இவ்வாறு சரவணன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com