

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர், உறவினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி, அதன் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், 21 மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக அப்பல்லோ சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்பல்லோ மற்றும் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட காரசாரமான வாதங்கள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.