வரத்து குறைந்ததால் மல்லிகை விலை உயர்வு

தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் திண்டுக்கல் மாவட்டத்தில் மல்லிகை கிலோ ரூ.2500க்கு விற்கப்பட்டது.
மல்லிகை
மல்லிகை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, நிலக்கோட்டை, வடமதுரை, அய்யலூர், ஏ.வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பூக்கள் சில்லறை வியாபாரிகள் மூலம் பல ஊர்களுக்கு வாங்கி செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணத்தால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை ரூ.2500-க்கு விற்பனையானது. கனகாம்பரம் ரூ.2000, முல்லை ரூ.800, ஜாதிப்பூ ரூ.400, சம்மங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.100, செண்டு மல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.60, ரோஸ் ரூ.60 என விற்பனையானது.

நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் சபரிமலை சீசனாக இருப்பதாலும் பூக்களின் தேவை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள், திருமணத்தை வைத்துள்ள குடும்பத்தினர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com