கரூர்:
கரூரில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. மாவட்டத்தில் மாயனூர், மணப்பட்டி, சேங்கல், திருக்காம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
கரூர் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு சீசன் காலத்தில் ரூ.400 முதல் ரூ.800 வரைக்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மல்லிகை பூ விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
முல்லை பூ ரூ.300-க்கும், பிச்சிப்பூ ரூ.500-க்கும், செவ்வந்தி, அரளி பூ தலா ரூ.120க்கும், சம்மங்கி ரூ.150- க்கும், ரோஜா பூ ரூ.200-க்கும் விற்பனையானது. துளசி ஒரு கட்டு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.