மலேசியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராகிம் 15-ம் தேதி விடுதலை- மகள் தகவல்

ஓரினச்சேர்க்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியா நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் அன்வர் இப்ராகிம் பொதுமன்னிப்பு அடிப்படையில் 15-ம் தேதி விடுதலையாகிறார். #MalaysianleaderAnwarrelease
மலேசியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராகிம் 15-ம் தேதி விடுதலை- மகள் தகவல்
Published on

கோலாலம்பூர்:

மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மன்னர் அளித்த பொதுமன்னிப்பு அடிப்படையில் அன்வர் இப்ராகிம் வரும் 15-ம் தேதி விடுதலையாவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை அன்வர் இப்ராகிமின் மகள் நூருல் இஸ்ஸா உறுதிப்படுத்தியுள்ளார். #MalaysianleaderAnwarrelease

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com