கோவையில் கைதான போதை ஊசி கும்பல் ஜெயிலில் அடைப்பு

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000-க்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்து வந்த 4 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் கைதான போதை ஊசி கும்பல் ஜெயிலில் அடைப்பு
Published on

பெங்களூர் மற்றும் வெளியூர்களில் இருந்து போதை ஊசி மருந்துகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்து அனுப்பும் அப்துல் ரகுமான்(24), மகேந்திரன்(27), அஜய்(24) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

கும்பலின் முக்கிய புள்ளியான பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல்(28) என்பவரை தேடி வந்தனர். நேற்று அவரையும், அவரது கூட்டாளிகளான கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது சிஹாப் (22), ஜூல்பிகர் அலி(24), முகமது அனாஸ்(24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை திருடி, அதை குளுக்கோசில் கலந்து கோவை கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. ஒரு ஊசியை ரூ.100-க்கு வாங்கி மாணவர்களிடம் ரூ.300-ல் இருந்து ரூ.1000 வரை விற்றுள்ளனர்.

இவர்கள் யார்-யாருக்கெல்லாம் போதை ஊசிகளை விற்பனை செய்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com