

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது அத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.
அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.
அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.
நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.