

புதுடெல்லி:
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் லடாக் தொடங்கி அருணாச்சல பிரதேசம் வரை உள்ள எல்லைப்பகுதியை இந்தோ திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த படைப்பிரிவு 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இமயமலைச்சிகரங்களில் உடலை உருக்கும் குளிரில் இந்த படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 1998-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது இந்த படைப்பிரிவு தனது படைக்கலன்களுடன் கலந்து கொண்டது. ஆனால், அதன் பின்னர் நடந்த அணிவகுப்புகளில் ஏனோ சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தங்களது நவீன உபகரணங்களுடன் இந்த படை நாளை களமிறங்க உள்ளது.
இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் அணிவகுக்கும் போது, அந்த படைக்கான பாடல் பின்னணியில் ஒலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.