

சென்னை:
தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். தமிழ்நாட்டில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை தான் பெய்து வருகிறது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தான் தொடங்கியது. வெப்பச்சலனம் காரணமாக அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
ஒகேனக்கல் 17 செ.மீ., தேன்கனிக்கோட்டை, செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) தலா 10 செ.மீ., குடியாத்தம், சூளகிரி, மேலலாத்தூர் தலா 9 செ.மீ., பெண்ணாகரம் 8 செ.மீ., மறந்தகள்ளி, வாடிப்பட்டி, உளுந்தூர்பேட்டை, ராசிபுரம், ஏற்காடு, அரியலூர், ராயக்கோட்டை, பரமத்திவேலூர், சேலம் தலா 7 செ.மீ., செங்கம், அரக்கோணம், துறையூர், நாமக்கல், தாத்தையங்கார்பேட்டை, பெனு கொண்டாபுரம், கள்ளக்குறிச்சி தலா 6 செ.மீ., திருப்பத்தூர், ஆலங்காயம், விரிஞ்சிபுரம், தளி தலா 5 செ.மீ., தாளவாடி, ஓமலூர், ஆத்தூர், வேலூர், பள்ளிப்பட்டு தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.