

சென்னை:
2014ம் ஆண்டில் நடைபெற்ற சார்க் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்காகவும், அனைவரும் பலன் பெறும் வகையில் செயற்கைக்கோள் ஒன்று ஏவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதற்கு முதலில் சார்க் செயற்கைக்கோள் என்று பெயரிடப்பட்டது. ஆனால், இதில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்து விட்டது. இதனையடுத்து, செயற்கைக்கோளின் பெயர் தெற்கு ஆசியா செயற்கைக்கோள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தகவல் தொடர்பு, பேரிடர் ஆதரவு மற்றும் தெற்கு ஆசிய பகுதி நாடுகளை இணைப்பதே இந்த செயற்கைக்கோளின் அடிப்படை நோக்கம். கடந்த 3 ஆண்டுகளாக இந்த செயற்கைக்கோளை தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வெள்ளிக் கிழமை) மாலை 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக் கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 12.57 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து விஞ்ஞானிகள் இதனுடைய செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கவுண்டன் முடிந்து தற்போது ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்துள்ளது.
இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக என்பது இன்னும் அரை மணி நேரத்தில் தெரிய வரும்.
இது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 11-வது ராக்கெட்டாகும். இந்த செயற்கைகோளின் பயனை இந்த மண்டலத்தில் உள்ள பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து சார்க் நாடுகளும் அடையும். ஜி-சாட் 9 செயற்கைகோள் 2,230 கிலோ எடை கொண்டது. தகவல் தொடர்புக்கு உதவும் ‘12 கே.யு.பேண்ட்’ எந்திரங்களை சுமந்து செல்கிறது. இதனுடைய ஆயுள் காலம் 12 ஆண்டுகள்.
இந்த செயற்கைகோள், தகவல்தொடர்பு, தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கு பேரிடர் பற்றி முன்கூட்டியே தகவல்களை தெரிவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தகவல் திறனை அளிப்பது, மாநில நூலகங்களை இணைக்கும் திறன் கொண்டது.