ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் சாகவில்லை: ஈராக் ராணுவ தளபதி தகவல்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் சாகவில்லை என ஈராக் ராணுவ தளபதி யாஹ்யா ரசூல் தெரிவித்துள்ளார்.
Published on

பாக்தாத்:

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் இப்ராகிம் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 45). இவரை அமெரிக்கா 2011-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து, இவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.162 கோடி) விலை வைத்தது. ஆனால் அவர் அமெரிக்காவின் பிடியில் சிக்கவில்லை.

இந்த நிலையில், சிரியாவில் ராக்கா நகர் அருகே சுகோய் ரக போர் விமானங்கள், கடந்த மே மாதம் 28-ந் தேதி இரவு நடத்திய குண்டுவீச்சில் அல் பாக்தாதி கொல்லப்பட்டு விட்டார் என ரஷிய ராணுவம் அறிவித்தது.

ஆனால் அவர் கொல்லப்படவில்லை; அவர் ஈராக்குக்கும், சிரியாவுக்கும் இடையே பாலைவன எல்லைப் பகுதியில் பதுங்கி இருக்கிறார் என ஈராக் ராணுவ கூட்டு நடவடிக்கைகள் கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா ரசூல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “எங்களுக்கு கிடைத்துள்ள மிக துல்லியமான உளவு தகவல்கள்படி அல்பாக்தாதி, ஈராக்கின் எல்லைப்புற நகரமான அல் காயிம், சிரியாவின் அபு கமால் நகரங்களுக்கு இடையேதான் பதுங்கி உள்ளார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “எல்லையோரப்பகுதிகளில் பாதாள பதுங்குமிடங்களில்தான் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகள் பதுங்கி உள்ளனர்” என்றும் அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com