ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா?: பரபரப்பு தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Published on

ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூருவை சேர்ந்த பெண் அம்ருதா கூறி வருகிறார்.

அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க வேண்டும், மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தார். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யும்படி அம்ருதாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அம்ருதா தயாராகி வருகிறார்.

ஏற்கனவே அம்ருதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது அவருக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் லலிதா, ரஞ்சனி ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.


லலிதா அளித்த பேட்டியில் ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை தான் என்றும், அந்த பெண் அம்ருதா தான் என்பது தனக்கு தெரியாது என்றும், டி.என்.ஏ. பரிசோதனை நடத்தினால் உண்மை தெரியும் என்றும் கூறி இருந்தார்.

கடந்த 3மாதங்களுக்கு முன்பு ரஞ்சனி தான் அம்ருதாவை அழைத்து வந்து ஜெயலலிதாவின் மகள் என்று தன்னிடம் கூறியதாக லலிதா கூறி இருந்தார்.

அம்ருதாவின் மனுவில் கையெழுத்திட்ட ரஞ்சனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அம்ருதா மூலம் ஜெயலலிதாவின் குடும்ப ரகசியங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைக்கு அம்ருதாவை பயன்படுத்த ரஞ்சனியிடம் சசிகலா ஆலோசனை வழங்கி இருக்கிறார். அந்த ஆலோசனைப்படி தற்போது அம்ருதா செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அம்ருதாவை இயக்குவதால் சசிகலாவுக்கு என்ன லாபம் என்று பலர் கேட்கிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க. கையை விட்டு போய்விட்டது. சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு வந்துவிட்டால் கட்சியையும் சொத்துக்களையும் மீட்டெடுத்து விடலாம் என்று சசிகலா நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்ருதா தன்னை மீறி எதுவும் செய்யமாட்டார் என்றும் அவர் வெளியே வருவது நல்லதுதான் என்றும் சசிகலா நினைக்கிறார். ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்று சொன்னால் கட்சிக்குள்ளும் குழப்பம் வராது, சொத்துக்கு சொந்தம் கொண்டாடி வரும் தீபக் மற்றும் தீபாவும் அமைதியாகிவிடுவார்கள் என்றும் சசிகலா நினைக்கிறார்.

தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும், தீபா - தீபக்கும் சசிகலாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவதால் அவர்களுக்கு செக் வைக்கும் எண்ணத்துடன் அம்ருதாவை களத்தில் இறக்கி இருப்பதாக தகவல் உலா வருகிறது.

இதற்காகத்தான் ரஞ்சனி மூலம் சசிகலா காய் நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சனி என்பவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கு உறவினர். இது ஏற்கனவே சசிகலாவுக்கும் தெரியும். மேலும் ஜெயலலிதாவின் உறவினரான லலிதா கூறும் போது ஜெயலலிதாவுக்கு 1980-ம் ஆண்டு பிரசவம் பார்த்தபோது ரஞ்சனி உடன் இருந்தார் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரஞ்சனி மூலம் அம்ருதாவை வைத்து அரசியல் எதிரிகளுக்கு பதிலடி கொடுத்து மீண்டும் அரசியலை கையில் எடுக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com